Sep 16, 2009

மீண்டும் என் விஜயம்


பல மணி நேரம் பஸ் பயணம்
சிலமணி
நேரம் சிறு தூக்கம்
பத்து வருடம் காணாத ஊர்
பவித்திரமோ என்று தயக்கம்


அன்று ,
செழித்த அந்த 
வயல் நிலங்கள்
செவ்வாளைத்ததோட்டங்கள் 
பட்டால் கால் சிவக்கும் 
செம்மண் வீதிகள் 

இன்று,
நிறைந்த  வெறுமை

பொயிலை காம்பை
வாயில் திணித்தபடி
பொக்கைவாய்க்கிழவி 
பொரிந்து தள்ளினாள்
"நிலமையைப்பத்தியளோ 
எங்கட ஊர் இப்ப சுடுகாடாய் 
போயிட்டுதையோ "

பேச்சோடு கமகமத்த
மண்ணின் வாசனையில்
சிற்றுடல்  சிலிர்த்தது.....

பணிகளும் வடலிகளும்
அலங்கரிக்கும் ஊரில்
மொட்டை பானைகளும்
சில குட்டை வடலிகளும்
எச்சங்களாக......

சைக்கிலோட்டிகளும்
வண்டிக்காரர்களும்
போட்டிபோடும் வீதிகள்
அமைதித் தீவுகளாக....

கூத்துப்பட்டறைகாரர்களும்
பனங்கள்ளுப்பிரியர்களும்
பாடித்திரியும் பேரூரில்
சில சில்வண்டுகள் மட்டும் .......

சரிந்து கிடந்த சிறு வீட்டில்
நெடும்பனையின் ஓலைகளும்  
உருக்குலைந்த ரங்குப்பெட்டியும்
வாழ்க்கைத்தடங்களாக...

நெஞ்சம் நெருடியது
கதறி அழத்தோன்றியது
கிட்ட  வந்து
கிழவி சொன்னாள்
"நல்லாய் அழு இப்ப
எங்கட ஊருக்கு செத்த வீடு"