Oct 14, 2009

சுவாசித்துக்கொண்டிருக்கிறோம்



மழை நம்மை
நனைக்கவே யோசிக்கின்றது......

நிலா நம் முற்றத்தை
மட்டும் தொடுவதேயில்லை......

வசந்தம் நிரந்தரவிடுமுறை
எடுத்துக்கொண்டது....

இருந்தும் நம் சுவாசிக்கின்றோம்
நம் உடல் நீங்கி
உயிர் போகின்றவரை.......

நாம் பட்ட பாடு
நாய் பட்டிருக்காது
காடு நம் வீடானது
நம் வீடு காடானது
இரண்டிலும் வாழ்ந்திருந்தோம்
இரை தேடி அலைந்திருந்தோம் .......


படுக்க பாயில்லை
 உடுக்க உடையில்லை
விலங்கிற்கும் மனிதனுக்கும்
சமத்துவம் பிழையில்லை...... 

 விலங்கியல் கற்றுக்கொண்டோம்
பொருளியல் புரிந்துகொண்டோம்
துப்பாக்கி முழக்கத்தில்
சங்கீதமும் கற்றுக்கொண்டோம்

கண் முன்னே மரணம் கண்டோம்
பட்டினியில் பேச்சிழந்தோம்
ரத்தநதிகள் கடந்து வந்தோம்
செழித்த நம் மண்ணில் செல் வீச்சில்
அங்கமிழந்தோம்

இருந்தும் நாம்
சுவசித்துக்கொண்டிருக்கிறோம்
நம் உடல் நீங்கி
உயிர் போகின்றவரை .........

Sep 16, 2009

மீண்டும் என் விஜயம்


பல மணி நேரம் பஸ் பயணம்
சிலமணி
நேரம் சிறு தூக்கம்
பத்து வருடம் காணாத ஊர்
பவித்திரமோ என்று தயக்கம்


அன்று ,
செழித்த அந்த 
வயல் நிலங்கள்
செவ்வாளைத்ததோட்டங்கள் 
பட்டால் கால் சிவக்கும் 
செம்மண் வீதிகள் 

இன்று,
நிறைந்த  வெறுமை

பொயிலை காம்பை
வாயில் திணித்தபடி
பொக்கைவாய்க்கிழவி 
பொரிந்து தள்ளினாள்
"நிலமையைப்பத்தியளோ 
எங்கட ஊர் இப்ப சுடுகாடாய் 
போயிட்டுதையோ "

பேச்சோடு கமகமத்த
மண்ணின் வாசனையில்
சிற்றுடல்  சிலிர்த்தது.....

பணிகளும் வடலிகளும்
அலங்கரிக்கும் ஊரில்
மொட்டை பானைகளும்
சில குட்டை வடலிகளும்
எச்சங்களாக......

சைக்கிலோட்டிகளும்
வண்டிக்காரர்களும்
போட்டிபோடும் வீதிகள்
அமைதித் தீவுகளாக....

கூத்துப்பட்டறைகாரர்களும்
பனங்கள்ளுப்பிரியர்களும்
பாடித்திரியும் பேரூரில்
சில சில்வண்டுகள் மட்டும் .......

சரிந்து கிடந்த சிறு வீட்டில்
நெடும்பனையின் ஓலைகளும்  
உருக்குலைந்த ரங்குப்பெட்டியும்
வாழ்க்கைத்தடங்களாக...

நெஞ்சம் நெருடியது
கதறி அழத்தோன்றியது
கிட்ட  வந்து
கிழவி சொன்னாள்
"நல்லாய் அழு இப்ப
எங்கட ஊருக்கு செத்த வீடு"

Jul 18, 2009

நட்பின் மழையில் நனைகிறேன்
நாளைய என் சோகங்களையும்
என்றைய என் வடுக்களையும் மறந்து .........

உயிர்கள் தேடும் அன்பிற்கு - இது
அகராதி சொல்லாத அர்த்தம் .....
ஆசை ..........

பலருக்கு பணத்தில்

சிலருக்கு ஆடம்பரத்தில்

எனக்கோ உன்பூவிதழ்களில் .....

Jul 17, 2009

சூரியன்

கார் மேகங்கள் சூழ்ந்தாலும்

புழுதிப்புயல்கள் வந்தாலும்

நிசப்தமாய் முன்னேறிக்கொண்டிருப்பேன்

ஏனெனில் - நான்

நீங்கள் ஊதினால் அணையும் தீக்குச்சி அல்ல

என்றுமே நித்திய சூரியன் .........................


நான் இன்றும் சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்

என் உள்ளத்தில் இன்னும் தைரியம் இருப்பதால்....


காற்று வீசும் வரை


கடலின் ஆழம் வரை


வானநீலம் வரை


தமிழே நீ வேண்டும்


வாழ்வின் இறுதிவரை



Jul 15, 2009

என் ஒருநாள் பொழுது.....

வானத்து முகிலிடை செந்நிறம் பரப்பி
மங்களப்புன்னகை பூத்து மயக்கிட
தூக்கம் விழித்து நாணம் விலக்கி
வெளியே வந்தாள் சூரியதேவதை

விடியல் கண்டு உயிர்கள் மகிழும்
என் போன்ற சில பேர்கள் தவிர.....
இருவாளித்தண்ணீரில் குளியல் கொண்டு
அரைமணிப்பொழுதில் சேலை கட்டி
ஆசான் என்னும் வேடம் கொண்டு
நானும் போகிறேன் பள்ளிக்கூடம் ..........


வளரும் ..................
தூரத்து மேகமாய்
தொலைதூர விண்மீனாய்
இடைவெளிகள்

நீண்டு போனாலும்
மொழிகளைத்தண்டிய இசை போல
தேசங்கள் தாண்டிய தென்றல் போல
என்றென்றும் நித்திய சூரியன் போல
நம் இதயங்கள் எப்பொழுதும்
ஒரே சப்தத்திலேயே துடிக்கும்












எழுபத்து இரண்டு

மேளகர்த்தாவிற்குள்

ஒளிந்திருப்பது

இசை மட்டுமல்ல

என் பூபாளமே நீயும் தான்.............

கண்ணே நீ என் கவிதை


உன்னை ரசிப்பதிலேயே


கழிந்துபோகிறது - என்


நாள்காட்டி


Jul 11, 2009

நீண்டதூரம் போய்விட்டேன் உன்னை விட்டு

மீண்டும் வருவேன் காத்திரு

Jun 27, 2009



மழை இப்போது நம்மை நனைக்கவே யோசிக்கின்றது !
நிலா நம் முற்றத்தை மட்டும் தொடுவதேயில்லை !
வசந்தம் நிரந்தர விடுமுறை எடுத்துக்கொண்டது.
இருந்தும், நாம் சுவாசிக்கின்றோம்
உடல் நீங்கி உயிர் போகின்றவரை !

நீதிக்காய் சில நிலாக்கள்



வஞ்சிக்கப்பட்ட கன்னியர்
கதறுகிறார்கள் - தம்மை
வசீகரித்துப்போன

காளையர்க்காக
!
மனை
துறந்த மனைவிகள்
காத்திருக்கிறார்கள்
கானலாகிய
கணவர்களுக்காக
!
முப்பது
வருட முதிர்கன்னியர்
விழித்துக்கிடக்கின்றனர்
சீதனம் கேட்காத
ஸ்ரீராமர்களுக்காக
!
பத்து வயது
பள்ளி
மொட்டுக்கள்
போர்க்கொடி
துக்கின
துகிலுரிந்த
சில
துச்சாதனர்களுக்காக
!

இங்கே சில கண்ணகிகள்
சில
தமயந்திகள்
சில
சகுந்தலைகள்
சில
சீதைகள்
வாழ்ந்துகொண்டுதனிருக்கின்றார்கள்

இருந்தும்
,
இவர்களை இலக்கியமாக்க
இன்னும்
பேனா முனைகள் தயங்குவதேன்!

தலைவிதி


பஞ்சு மெத்தைகள் தொலைந்து போய் - நம்
மழலைகள் இன்று முகாம் வேலிகளில்....
முட்கள் காயம் செய்தது- நம்
உடலை மட்டுமல்ல
உள்ளத்தையும் தான் .

Jun 26, 2009


நீ போனதோடு தொலைந்து போனது
என் கனவு மட்டுமல்ல
நிம்மதியும் கூடத்தான் !

கண்ணீர்


கண்களுக்கும் கவிதைக்கும் மட்டுமல்ல
நீலக் கடலுக்கும் அந்தி நிலவுக்கும் புரியும்
நீயில்லாமல் நான் வடிக்கும் ரத்தக்கண்ணீர்...

கடற்கரை மணலில்
கால் தடம் பதிக்கிறேன்
உன் மனதில் முடியாததால்

வேண்டும்


நிலவும் மலரும் பூக்கும்
காலை மாலைதோறும்
கனவும் நினைவும் கூடும்
கருநிற இரவுகள் முழுதும்
உன் நினைவின்
சுவடுகள் வேண்டும் - என்
சுவாசங்கள் சுருங்குகின்ற போதும்.

Jun 22, 2009


எங்கிருந்து வருகிறார்கள் புரியவில்லை
நான் சாய்கின்றபோது
தூக்கி நிறுத்தும் தூண்களாக............
நான் அழுகின்ற போது
கண் துடைக்கும் கைக்குட்டைகளாக.........
இவர்கள் மட்டும் இல்லை எனின்
என்னை புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.....
என் இறுதி வரை
நான் பெரும் வெற்றிகள் எனக்கல்ல
என்னை நேசிக்கும் உறவுகளுக்கே சொந்தம்

Jun 21, 2009


நம்மவர் பூமியில் நம் மொழி பேசியபடி
உலவும் காலம் என்று வருமோ
அன்று நின்மதியோடு தருகிறேன்
என் கைகளை உனக்காக!

கண்ணீர்த்துளிகளும் காயம் செய்யும்........
தெரியுமா உனக்கு?
உன் ஒவ்வொரு கண்ணீர்த்துளியும்
என்னை ரணப்படுத்தியிருக்கிறது..........

சோலையாய் வாவென்றேன்
நீ வராமலேயே போனது
என்வாழ்வில் வசந்தங்கள்
இல்லை என்பதாலா?

Jun 17, 2009

பஞ்சம்

உனைக்கண்ட பிறகு தன்
என் அகரதிக்கும் வந்தது
மொழிப்பஞ்சம்

Jun 16, 2009

நேசித்த வாழ்வு கிடைக்கும் களிப்பில் நீ
யாசித்த காதல் தகர்ந்து போனதில் தவிப்புடன் நான்.....

புயல்

இதயக் கதவினை
திறந்து வைத்தேன்
காற்றாய் வருவாயென்று
புயலாகி
கதவுகளை மூடிவிட்டாய்
என்னொருவன் நுழையாதபடி!

Jun 11, 2009

காதல்.

காதல்
பலவேளைகளில்
புண்மேல் குற்றும் முள்
புழு
மேல் இடப்பட்ட நெருப்பு
பூவுக்குள்
அடிக்கின்ற புயல்

காதல்

பலவேளைகளில்
விதண்டாவாதம்

விலையுயர்ந்த சீப்பு
வீணான
தேடல்

காதல்
சிலவேளைகளில்
இதயத்தை வருடும் ரோஜா,
அதன் முள் குற்றுகின்றவரை !
அழகாய் வளர்ந்து விட்ட மூங்கில்
அது பூக்கின்றவரை!
பயன்மிக்க மருந்து,
முடிவுத்திகதி முடிவடையும் வரை !
பூபாளத்தில் மட்டுமல்ல
உன் பூவிதழ் அசைவுகளிலும்
நான் ஸ்தம்பித்திருக்கிறேன்.....

Jun 10, 2009

நிலா உதிக்கின்ற நிசப்த இரவுகளில் தனி நட்சத்திரமாய் பார்த்துக்கொண்டிருப்பேன் உன்னை நிலவாக நினைத்து ..........
கள்ளிச்செடிகள் கல்லெறிபடலாம்
காலப்போக்கில் ஆறிப்போகும்
காதல் இதயம் சொல்லெறிபட்டால்
ஆயுசுக்கும் ரணமாயிருக்கும் .......

நீயும் நிலவும்


நிலவை விட
நான் நேசிப்பது
உன்னையும் - உன்
இசையையும் !

கையூட்டு

தென்றல் வரும் திசைகள் தோறும்
வாசனைகள் வருகின்றதே
காத்திற்கும் கொடுத்தாயோ கையூட்டு !

நீயும் என் கவிதையும்


என் கவிதை அழுகின்றது
அருகே கிறுக்கப்பட்டிருந்த
உன்பெயருக்கு முதலிடம்
கிடைத்ததாம் என்று........

வேகத்தடைகள்

இறந்தகாலக் கனவுகளில்
தேடிய என் ராஜகுமாரன்
வந்து சேர்ந்ததென்னவோ
நிகழ்கால வசந்தங்களில்
ஏன் கண்ணே தாமதம்?
உன் குதிரைக்கும் போட்டனரோ
வேகத்தடைகள்

Jun 9, 2009

;வாழ்க்கையில் வசந்தங்கள் வற்றிப்போய்

வாடைகள் நீளுகையில் என்

உள்ளத்து உணர்வுகளை கவிகளாக வடிக்கிறேன்

உண்மையில் இவை என்

உயிர் உடையும் ஓசைகளே............








;;;