May 15, 2013


பனை மரமும் பூத்தாச்சு ....

காற்றெல்லாம் வலைவீசி
கனவெல்லாம் துணை தேடி
காத்திருக்கும் பொழுதுகள்
கத்தியாய் குத்துதடா !

காதலில் கரைந்திருந்து
இருகனிகளாய் இணைந்திருந்த
கருவேலங்காடுகள் இன்று
கருகித்தான் போனதடா!

வயலோடு பசுமைவாங்கி
வனப்போடு வாழ்ந்த நாட்கள்
பனை கொண்ட நிழலாக
சுருங்கித்தான் போனதடா !

ஊர்மெச்ச வாழ்விக்க
உழைப்போடு வருவேனென்று
சொல்லிய வார்த்தைகள்
எதிரொலியாய் கேட்குதடா !
வருடங்கள் பத்தாச்சு
பனைமரமும் பூத்தாச்சு
நீ சொன்ன சொல்லெல்லாம்
காத்தோட போயாச்சு

செம்மணியில் புதைந்தாயோ
வெலிக்கடையில் உறைந்தயோ
புரியாமல் புலம்புகிறேன்
தூது விட மாட்டையோ ?


நவயுகா
(சுடச்சுட ஒரு சூரியன் தொகுப்புக்காக )

No comments: